சந்திப்போம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்போம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஏப்ரல், 2013

பலகோணப்பரிசீலனை !

எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப் 

பலகோணங்களில் பரிசீலிப்பதே வீரம்


இராணுவ வாழ்வின் ஒரு செயலின் முடிவைவிட செயலாக்கிய திறன் மிகவும் பாராட்டப்படுகிறது. வெற்றிதோல்விகளை நிர்ணயிக்கும் போர்முனைப் பகுதிகளில் கூட வெட்கப்படத்தக்க வெற்றிகளும், பெருமைப்படத்தக்க தோல்விகளும் ஏற்படுவதுண்டு. 1971-ஆம் வருடப் போர்க்களத்தில் நமது இலக்கை நோக்கி வந்த பாகிஸ்தானியப் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பொழுது மறுநாள் காலையில் பாகிஸ்தானியப் படைத் தளபதி தானே முன்னின்று அப்படையை நடத்தியதையும் , அதில் படைத் தளபதி நமது பாதுகாப்பு நிலைக்கு மிக மிக அருகில் கொல்லப்பட்டதையும் அறிய நேரிடுகிறது. 

அந்த வீரத்தைப் பாராட்டிய இந்தியத் தளபதி , பாகிஸ்தானியத் தளபதியின் செயலை வானாளவப் புகழ்ந்ததுடன், அவருக்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்று ஒரு கடிதத்துடன் அந்தப் பாகிஸ்தானியத் தளபதியின் உடலை அவர்களுக்கு அனுப்புவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தானிய அரசாங்கம் அந்தத் தளபதிக்கு பாகிஸ்தானிய மிகப்பெரும் விருதான நிஷானே பாகிஸ்தான் ( நமது பரம் வீர் சக்ராவுக்கு நிகர் ) வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட போரில் இருதரப்புமே வேற்றி பெற்றதாகத்தான் கருதப்படுகின்றது, எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப் பல கோணங்களில் பரிசீலப்பதே உண்மை வீரம். 

                                                       கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

வியாழன், 25 ஏப்ரல், 2013

அறிவார்ந்த அணுகுமுறை

ஓரளவு நகைச்சுவைத் திறன், மற்றும் காரியங்களுடன் கூடிய

கண்டிப்பு போன்ற குணங்கள்தான்  ஒருவர்

மீதான நம்பிக்கையைக் கொடுக்கும். 


இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புகளோ, கடுமையான அடக்குமுறைப் பண்புகளோ நிலைத்த வெற்றியைத் தருவதில்லை. தன்னடக்கத்துடன் கூடியதும், வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான மனப்போக்கு, ஓரளவு நகைச்சுவைத் திறன், மற்றும் காரண காரியங்களுடன் கூடிய கண்டிப்பு போன்ற குணங்கள்தான் ஒருவர்மீதான நம்பிக்கையைக் கொடுக்கும்.

இங்குதான் அதிகாரிகளுக்கும் அதிகாரிகள் அல்லாதோருக்குமான பாசப்பிணைப்பு, கடமையுணர்வு என்ற செஞ்சாந்து போட்டுக் ஒட்டப்படுறது. இப்படி ஒட்டப்படும் பிணைப்புகள் பணிக் காலத்திற்குப் பின்னும் உயிருள்ளவரை பிரிவதில்லை.  எத்தனையோ ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஓய்வு பெறாத அதிகாரிகள் அல்லாதோர் இன்னமும் நட்புக் கலந்த மரியாதையோடு கண்டு பேசி மகிழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட அறிவார்ந்த நட்பை உருவாக்குங்கள்.

                                                        கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )   

புதன், 24 ஏப்ரல், 2013

சட்டப் புத்தகத்தைச் சகதியில் எறியுங்கள்

இராணுவ அதிகாரிகள் மாறி மாறி வரும் சட்ட

நுணுக்கங்களில் பிடிமானம் கிட்டாமல்

தங்கள் இயலாமைக்கு அல்லது தோல்விகளுக்கு

காரணம் கேட்கக் கூடாது.

சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நிலவிய சூழ்நிலை, சமுதாயத் தேவைகளின் காரணமாக அடிப்படையில் உருவாக்கப்பட்டது. காலச் சூழ்நிலை மாறும்பொழுது சமுதாயத்தின் தேவைகளும் மாறுகின்றன. சட்டங்களும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இராணுவ அதிகாரிகள் மாறி மாறி வரும் சட்ட நுணுக்கங்களில் பிடிமானம் கிட்டாமல் தங்கள் இயலாமைக்கு அல்லது தோல்விகளுக்கு காரணம் தேடக் கூடாது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்கள் அறிவுத் திறனை வலுப்படுத்திக் கொண்டு தங்கள் மனச் சாட்சிக்குத் துரோகம் இல்லாமல் செயலாற்ற வேண்டும்.

போர் முனையிலிருந்து ஓடிப்போய்விட்ட ஒரு வீரன் குற்ற விசாரணையின்போது, காரணம் கேட்ட அதிகாரிக்கு,, ”ஐயா, நான் ஓடிப் போனதற்குக் காரணம் என் இயற்கைக் குணமான பயம்; சிந்தித்து முடிவெடுக்காமல் அனிச்சைச் செயலால் ஏற்பட்டது” என்கிறார். அந்தப் பதிலைக் கேட்ட அதிகாரி அவனைப் பாராட்டி, மன்னித்து, ”அனிச்சைச் செயல்களை வெல்பவனே வீரனாகக் கருதப்படுகிறான். மீண்டும் இதுபோன்று அனிச்சைச் செயல்கள் உன்னை ஆள்வதைத் தடுக்க வேண்டும். நீ இறந்தாலும் அது போர்க்களமாக இருப்பதற்காகப்
பெருமைப்படவேண்டும்” என்கிறார்.

அதிகாரம் இருக்கிறது; சட்டம் சொல்கிறது என்று அவனைத் தண்டிக்க முற்படவில்லை. கண்மூடித்தனமாகப் பழைய சட்டங்களைப் பின்பற்றுவது மனதைத் துருப்பிடிக்கச் செய்துவிடும்.                                                    

கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

திங்கள், 22 ஏப்ரல், 2013

எதிர்மறை எண்ணங்களுக்கு எதிர்ப்பு !

முரண்பாடான சிந்தனை போன்றவற்றால் மனிதன்

தனக்குள் தானே பேசிக் கொள்கிறான். அந்தப்

போராட்டத்திற்கு ஓய்வே இல்லை.


இரு படைகள் மோதும் களத்தைப் போர்க்களம் என்பார்கள். தனி மனிதர்கள் வாழ்விலும் அன்றாடம் ஓர் போர்  நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை உணர்வுகள் - எண்ண ஓட்டங்கள் - முரண்பாடான சிந்தனைகள் போன்றவற்றால், மனிதன் தனக்குள் தானே போரிட்டுக் கொள்கிறான். அந்தப் போராட்டத்தீற்கு ஓய்வே இல்லை. மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தாமல் கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வலுத்து வெளிப்பட்டுp பெரிய போராக வெடிக்கிறது. 

தாய் நாட்டின் பாதுகாப்புப் படையில் பணியேற்றுள்ள நீங்கள் பணிக்காலத்தில் உங்ளுக்குள்ளேயே ஒரு போர்க்களம் உருவாக அனுமதிக்கக்கூடாது. முரண்பாடான எண்ணம் ஒன்று தோன்றிய உடனேயே, எதிரியை மடக்குவது போல நாம் ஏற்றுள்ள பாதுகாப்புப் பணியை நினைவு கொண்டு  உடனே  நம் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். மக்களின் ஒட்டு மொத்தத் தொகுதியின் சின்னமே அரசாங்கம்; அதன் கொள்கைகளில் மதிப்பும் மரியாதையும் வையுங்கள்

அரசாங்கத்தின் குறியீடுதான் தலைவன் அவனது தகுதியிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டு, அவன் இடும் ஆணைகளுக்கு முழுமனதோடு உங்களது திறமை எல்லாவற்றையும் தந்து செயல்வடிவம் தாருங்கள்.
                          
கர்னல். பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

நாகரீகக் குடிப்பயிற்சிப் பண்பாளர்

கடற்கரைக்கருகில் நன்னீர் சுரக்கிறது.

மலை உச்சியில் உவர் நீர் இருக்கிறது.

மாற்று என்பது சாத்தியமே.

இராணுவ அதிகாரிகள் பயிற்சியின்போது பயிற்சி மாணவர்கள் நாகரீகக் குஃபிப்பயிற்சிப் பண்பாளர் என்று அழைக்கப்பஃபுகிறார்கள். இந்த மரியாதை காரணமாகவோ பழக்க வழக்கம் காரணமாகவோ ஏற்பட்ட சொற்றொடஎ அல்ல. தலைமைப் பண்பு என்பது ஒரு பாரம்பரியத்தில் உர்உருவாகும் குணம். தன்னிகரிலா மன, உடல், தைரியம், கனிவான அன்பு, கருணை உள்ளம், சோர்வில்லாத செயலாக்கத்திறன், கோழைத்தனமோ முரட்டுத்தனமோ இல்லாத வீரம் போன்ற குணங்கள் தன்மைப் பண்பின் அறிகுறிகளாக அடையாளம் காட்டப்படுகிறது. முயற்சித்தால் இந்த குண நலன்களை யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதுதான் இன்றைய அறிவியல் உண்மை.

கஃபற்கரைக்கு அஎஉகில் நன்னீர் சுரக்கிறது. மலை உச்சியில் உவர் நீர் இருக்கிறது. மாற்று என்பது சாத்தியமே என்று இது குறிப்பதால் யார் தலைவனாக முடியும் என்பதை எதைக் கொண்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு நிலையிலும் தனது எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டு இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகள் எப்பட்டித் தடம் மாறும்போது சீரமைக்கப்படுகிறதோ அதுபோல் தவறான எண்ணங்களைச் ச்ந்தனையில் தோன்றவிஃபாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டுபவர்கள் இராணுவ அதிகாரிகள். ஆகவே தான், பயிஏசி மாணவர்கள் நாகரீகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் என்றழைக்கப்படுகிறார்கள்.                             

சனி, 20 ஏப்ரல், 2013

தலைவன் யார் ?

வெற்றியைப் பகிர்ந்து கொண்டாடுங்கள்.

தோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறுப்பேற்றுக் கொள்ளூங்கள்

படைப் பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.

’செயலுரிமைக் கட்டளை’ பெற்றதாலேயே நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுவீர்கள் என்பது தவறான முடிவு. குதிரை தன்மேல் சவாரி செய்பவன் திறமைசாலி இல்லை என்று கண்டு கொண்டால் அவனைக் கீழே தள்ளிவிடும். மகா அலெக்ஸாண்டர் குதிரை புசிபேலஸ் அவர் முதலில் ஏற முயன்றபோது திமிறியது. வெயிலில் தன் நிழல்கண்டு குதிரை மிரள்கிறது என்று அறிந்து அதை சூரியனுக்கு மறுபக்கம் திருப்பி நிறுத்தியபோது அது அவருக்கு அடிபணிந்தது.

அவ்வாறு ஒவ்வொரு சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களிலும் உங்கள் தலைமைப் பண்பை நீங்கள் நிரூபித்தால் ஒழிய உங்கள் படப்பிரிவினர் அதை நம்ப மாட்டார்கள். நீங்கள் திறமைசாலிதான் என்பதையும், உங்கள் படைப்பிரிவில் நீங்கள்தான் சிறந்தவர் என்ற தெளிவையும் படைப்பிரிவில் எல்லோரும் பெற வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள்தான் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். வெற்றியின் களிப்பில் படைப்பிரிவின் திறமையும், தோல்வியின் துயரத்தில் தலைவனின் திறமை இன்மையும்தான் வெளிப்பட வேண்டும். வெற்றியைப் பகிந்து கொண்டாடுங்கள். தோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறிப்பேற்றுக் கொள்ளுங்கள். படைப்பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.


கர்னல், பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

செயலுரிமைக் கட்டளையும் செயலாக்கமும்

தங்களது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டு

அதன் காரணமாக அளிக்கும் பரிசுதான்

செயலுரிமைக் கட்டளை.

காலம் வளர வளர இந்தக் கூட்டு மதிப்பு 

உயர வேண்டுமே தவிர குறையக் கூடாது.

commission  என்பது குடியரசுத் தலைவரின் செயலுரிமைக் கட்டளையாகும். பயிற்சிக் காலத்தில் நீங்கள் காட்டிய செயலாக்கத் திறன் , நேர்மையான அணுகுமுறை, சிந்தனை சக்தி, உடல் மற்றும் மன வலிமை, தேசப்பற்று,  தியாக மனப்பான்மை, புதிய சூழ்நிலையிலும் புதிய மனிதர்களுடன் ஒத்துப் போகக் கூடிய மனப்பான்மை போன்றவற்றின் கூட்டு மதிப்பாக தங்களது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டு, அதன் காரணமாக அளிக்கும் கட்டளைதான் செயலுரிமைக்கட்டளை.

காலம் வளர வளர இந்தக் கூட்டு மதிப்பு உயரவேண்டுமே தவிர குறையக் கூடாது. வாய்மை தவறாமை என்ற குணம் ( LOYALTY ) நான்கு பரிமாணங்கள் கொண்டது என்றாலும், முதல் பரிமாணம் தனக்குத்தானே வாய்மை தவறாமை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைத்தான்,
"தன்னெஞ்சறிவது பொய்யற்க: பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்"
என்றார், பொய்யா மொழியார். 

நமக்கு நாமே உண்மையோடு இருப்பதிலிருந்து அபூர்வமான ஆத்மசக்தி பிறப்பதை நாமே அறியலாம். அதுதான் பாராட்டிற்குரிய தலைமைப் பண்புக்கு அஸ்திவாரமாக விளங்குகிறது.

கர்னல்.பா.கணேசன், B.Tech.  V.S.M ( ஓய்வு )

எனது பொறுப்புகள் என்ன ஆவது ?

உங்களது பொறுப்பு பணியாற்றுவதுதான்.  திருமணம் -

குடும்பம் -  மனைவி - குழந்தைகள் - அவர்களது நலன்

இவைகள் எல்லாம் நீங்களே உருவாக்கிக் கொண்டது 

என்பதை மறந்து விடாதீர்கள்.


ஐயோ ! நான் தவறாக இராணுவப்பணியைத் தேர்ந்தெடுத்துவிட்டேனே என்று ஒரு நாளும் வருந்தாதீர்கள். உங்களது விருப்பத்திற்கு எதிராக எதுவுமே நடக்க முடியாது. அப்படி நடந்தது என்றால் உங்களிடம் சிந்தனைச் சீரமைப்பு இல்லை என்றும், நீங்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்றும் கருத நேரிடலாம். மனித மனம் ஒரு சமயம் ஒரு எண்ணத்தைத்தான் உருவாக்க முடியும். பலவிதமான எண்ணங்களை ஒரே சமயத்தில் உருவாக்க முயற்சிக்கும்பொழுதுதான் குழப்பமும் அதன் காரணமாக எந்த ஒரு செயலும் சிறப்பாக இல்லாமலும் போய்விடுகின்றது.

யாருக்கு யார் பொறுப்பு என்பதை சற்றே சிந்தியுங்கள். உங்களது பொறுப்பு பணியாற்றுவதுதான். திருமணம் - குடும்பம் - மனைவி - குழந்தைகள் - அவர்களது நலன் - இவைகள் எல்லாம் நீங்களே உருவாக்கிக் கொண்டது என்பதை மறந்துவிடாதீர்கள். பிளந்த மரத்தில் வாலை நுழைத்துக் கொண்டு செருகுக் கட்டையை எடுக்க முயற்சிக்கும் குரங்கின் கதி என்னவாகும் என்பதை நினைவில் கொண்டு செருகுக் கட்டையை எடுக்க முயற்சிக்காதீர்கள். வாலை நுழைத்துக் கொண்டது தவறில்லை. ஆனால், தக்க மாற்று வழி இன்றிச் செருகுக் கட்டையை எடுக்க முயற்சிப்பது அறிவீனம் !                                                                                                

கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களின் சுழற்சி குயவனின் சக்கரம்போல் சுழன்று

நம் ஆன்மீக ஆர்வம்தான் சிறிது சிறிதாக நம்மை

உருவாக்குகிறது.

எண்ணங்கள் புரட்சிகரமானவை; எண்ணங்கள் உணர்ச்சிகரமானவை; எண்ணங்கள்தான்  உண்மையில் சூழ்நிலைகளை மாற்றியமைக்கின்றன. இப்படிச் சொல்லலாம். மனம் என்பது நிலம். எண்ணங்கள் விதைகள். விதைக்கிற விதைகளின் ரகத்திற்கும் திடத்திற்கும் தக்கபடியே பயிர் வளர்கிறது. செடி கொடி மரம் எதுவாயினும் விதைகளின் தரத்திற்கேற்பவே அமைகின்றன. மனதில் தோன்றும் எண்ணங்கள் உறுதியாக ஆக அன்றாடம் அதன் திடத்தன்மை வளர வளர நம் ஆளுமை வளர்கிறது. எண்ணங்களின் சுழற்சி குயவனின் சக்கரம் போல் சுழல்வது.

நம் ஆன்மீக ஆர்வம்தான் சிறிது சிறிதாக நம்மை உருவாக்குகின்றது. பிறகு எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவருகின்றன. வார்த்தைகள் செயல் வடிவம் பெறுகின்றன, தொடர்ந்தாற்போன்ற செயல்கள் பழக்கமாகின்றன. பழக்கவழக்கங்கள் ஒருவனின் குணநலன்களை நிர்ணயிக்கின்றன. குணநலன்கள் அவன் தலை விதியை நிர்ணயிக்கின்றன. உங்கள் தலை விதியை நிர்ணயிப்பது உங்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.                                 

கர்னல்.பா.கணேசன், B.Tech. V.S.M. (  ஓய்வு )

என் கடன் பணி செய்து கிடப்பதே !




பணியில் மனம் ஈடுபட்டுச் செய்யும்போது

தானாகவே அதில் உற்சாகம் பிறக்கிறது.
\

பணி செய்வது என்பது உங்களது வாழ்க்கைத் தத்துவமாக இருக்க வேண்டும். வேலை ஏதும் கிடைக்கவில்லை என்று இராணுவ சேவைக்கு நீங்கள் வந்திருந்தாலும் பல நுட்பமான தெர்வுகளுக்குப் பின்னர் , பல சிறப்பான பயிற்சிக்குப் பின்னர், பல இன்ப துன்பங்கள் கொண்ட மனக்கட்டிப்பாட்டிற்குப் பின்னர்தான் இன்று - இங்கு பணி புரிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலை செய்யும்போது வீட்டைப் பற்றியும் வீட்டிலிருக்கும்போது உறவினர்களைப்பற்றியும் எண்ணி உங்கள் வாழ்வில்ன் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டுக்களை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பணியில் மனம் ஈடுபட்டுச் செய்யும்போது தானே அதில் உற்சாகம் பிறக்கிறது. அதன் காரணமாக வேலை சிறப்பாக அமைகிறது. சிறப்பான வேலை பதவி உயர்வுக்கு ஆதாரமாகிறது. செய்யும் வேலையை நேசியுங்கள்.              

கர்னல்.பா.கணேசன்.B.Tech. V.S.M ( ஓய்வு )

வியாழன், 18 ஏப்ரல், 2013

தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் !

உன்னைப் பின்பற்றுபவர்களின் எண்ணங்களையும்

ஆசாபாசங்களையும் நன்கறிந்து அவற்றைச்

சரியாக நெறிப்படுத்தி வளர்க்கும்

எண்ணம் தலைவனுக்குத் தேவை 




“தலைவர்கள்” என்பவர்கள் பலவிதமாக உருவாகிறார்கள். சுற்றுப்புறத்தால், சூழ்நிலைகளினால், பிறப்பால், கல்வித் தகுதியால், பயிற்சி முறைகளினால் என்று பலவிதங்களிலும் தலைவர்கள் உருவாகிறார்கள். இவைகள் எல்லாம் ஒரு துணைக்காரணமாக இருக்கலாமே ஒழிய, “தலைவன் தானாகவே உருவாகிறான்” எஎன்பதுதான் உண்மை.

தொண்டர்கள் பின்பற்றுவோர் என்று பலர் அவனது உயர்வுக்கான பிரமிடை அமைத்துச் சென்றாலும், ஒவ்வொர் சங்கிலிக் கரணையோடு அவனுக்குள்ள உறுதியான தொடர்புதான் அவனை அந்தத் தலைமைப் பீடத்தில் நிலைத்து நிற்க வைக்கிறது. அதற்குத் தானாகச் சிந்தித்துத்ச் செயலாற்றும் திறன் தேவை. தன்னைப் பின்பற்றுவோர்களின் உள்ளத்து எண்ணங்களையும், ஆசாபாசங்களையும் நன்கறிந்து அவற்றைச் சரியான முறையில் நெறிப்படுத்தி வளர்க்கும் எண்ணம் தலைவனுக்கு வேண்டும்.

 உண்மையில் இந்த எண்ணமும் பரிவும்தான் அவனைத் தலைவனாக நிலைத்து நிற்க வைக்கும். மற்ற முறைகளில் உருவாகும் தலைவர்கள் காலம் என்னும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.                            

கர்னல்.பா.கணேசன், P.Tech.V.S.M ( ஓய்வு ).  

மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை

இருளின் அழிவில்தான் ஒளி பிறக்கின்றது

அறியாமையின் அழிவில்தான் ஞானம் பிறக்கிறது


மாற்றங்கள் வாழ்வில் தவிர்க்க இயலாதவை. ஒவ்வோர் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை என்ற இயக்கமே மாற்றத்தின் அடிப்படையில்தான் நடந்து வருகின்றது. ஆனால் பொதுவான மனப்போக்கு மாற்றத்திற்கு எதிராக இருக்கிறது. சிலர் மாற விரும்புவதில்லை; சிலர் மாற்றங்களை எதிர்க்கிறார்கள்; சிலர் மாறத் தெரியாமல் தவிக்கிறார்கள்; ஒரு நிலையிலிருந்து மேல் நிலைக்குப் பதவி உயர்வு பெறும்பொழுது அந்த உயர் தகுதிக்கு ஏற்றாற்போல் உங்களை மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம்.

ஒன்றின் அழிவில்தான் மற்றோன்று வளரமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைப் பருவம் அழிந்தால்தான் வாலிபப் பருவம் பெற முடியும். வாலிபம் அழிந்தால்தான் முதுமை பெற முடியும். பிரமசர்யம் அழிந்தால்தான் குடும்பஸ்தனாக முடியும். இருளின் அழிவில்தான் ஒளி பிறக்கிறது. அறியாமையின் அழிவில்தான் ஞானம் பிறக்கிறது. இதனை நன்கு உணர்ந்து மாற்றத்தை வரவேற்கவும் அதற்குத் தக்கபடி மாறவும் தயாராவோம்.


கர்னல். பா. கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )..  

போர்க்களம்,

ஓய்வும் உறக்கமும் உள்ள இடத்திற்குப் போர்க்களம் 

என்று பெயரில்லை.
போரின் முடிவுகள் ஓரிரு நாட்களில் ஏற்படுவன அல்ல. போரின் பல நிலைகளைப் பல உதாரணங்களுடன் விளக்கலாம். உதாரணமாகச் சில தெரு நாய்கள் சண்டைக்குத் தயாராவதைக் கூர்ந்து கவனியுங்கள். ஆரம்ப அறிகுறி, மோதல், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காத இழுபறி நிலை, வெற்றி தோல்வியின் அறிகுறி, பின்னர் ஒன்றை மற்றொன்று விரட்டியடிப்பது;

கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு அணி மற்ற அணியை இழுத்து வெற்றி இலக்கைத் தொட்டு விடக்கூடிய நிலையில், தோல்வியின் விளிம்பிலிருந்த அணி ஒரே மூச்சில் மற்ற அணியை இழுத்து வெற்றிக் கனியைப் பறிப்பது புதிது அல்ல. காலம் காலமாக நடந்துவரும் நடைமுறைகள்தான் அதே சமயம் கயிறு இழுக்கும் போட்டியாகட்டும்; தெருநாய்ச் சண்சயாகட்டும் எளிதில் வெற்றிபெற எவரும் விட்டுக் கொடுத்து விடுவதில்லை. இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்றுதான் இரு அணிகளும் முயற்சி செய்கின்றன. ஏராளமான ஆயுதங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிமிடத்திற்கு நிமிடம் நடக்கக் கூடிய  இடம் போர்க்களம். ஆகையினால் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றோ சற்று உறங்கிவிட்டுப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ யாரும் கருதக் கூடாது. ஓய்வு - உறக்கம் என்பதற்கே அங்கே இடமில்லை. ஓய்வும் உறக்கமும் உள்ள இடத்திற்குப் போர்க்களம் என்று பெயரில்லை..    

கர்னல்.பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு ).

புதன், 17 ஏப்ரல், 2013

கட்டுப்பாடுகள்

சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அதை விதிப்பவர்களுடன்

கூடிப்பேசி அந்தக் கட்டுப்பாட்டின் நன்மை தீமைகளை

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது

அங்கு தலைவன் கொண்டாடப்படுகின்றான்.


கட்டுப்பாடுகள் இல்லாமல் உலகில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. வீடு, குடும்பம், பொது வாழ்க்கை என்ற எல்லா இடங்களிலும் கட்டுப்பாட்டின் கைப்பிடிச் சுவர் வளையமிட்டு நிற்கிறது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் சாலை ஒவ்வொரு நிமிடமும் விபத்தின் கேந்திரமாகிவிடும். அதே சமயம் கட்டுப்பாடு சில வரன் முறைகளுக்குள் அமைய வேண்டும். காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாடுகள் மனிதனின் சிந்திக்கும் திறமையைச் செயலிழக்கச் செய்து விடுகின்றன. கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அது ஏன், அதனால் என்ன உபயோகம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அதை விதிப்பவர்களுடன் கூடிப்பேசி அந்தக் கட்டுப்பாட்டின் நன்மை தீமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அங்கு தலைவன் கொண்டாடப்படுகின்றான். கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு உல்லாசம் காணப்போகும் தலைவன் கொலை செய்யப்படுகிறான். பொன் விலங்கானாலும் அவைகள் கைவிலங்குகள் என்று எண்ணுபவர்கள் இருக்கும் வரை அவைகள்
கைவிலங்குகள் அல்ல; கைப்பிடிச் சுவர்கள் என்பதை விளக்க வேண்டியது தலைவனின் கடமையாகிறது.               

கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

அதிகாரம்

 காரண காரியங்களுடன் விளக்கிக் கூட்டாளிகளுக்குப்

புரிய வைத்துவிட்டால் அதிகாரிகளின்

மற்ற வேலைகள் சுலபமாகிவிடும்

அதிகாரம் என்பது மற்றவர்களை அடிபணிய வைக்கக் கொடுக்கப்பட்ட ஆயுதம் மட்டுமல்ல; கூட்டாளிகளை அறிவினால் வென்று அன்பினால் ஒன்று படுத்த உதவும் கருவி. அப்படி அதிகாரத்தை உபயோகப்படுத்தத் தெரிந்து கொண்டு பழகினால், அதிகாரத்திற்கு ஆட்படவேண்டும் என்ற நிலையில் உள்ளோருக்கு எதிர்ப்புணர்வு வராது. 

நாம் ஏன் இந்த எல்லைப் புறங்களிலும், பனிப் பாலைவனங்களிலும் வீழ்ந்து கிடக்கிறோம் என்பதைக் காரண காரியங்களுடன் விளக்கிக் கூட்டாளிகளுக்குப் புரிய வைத்துவிட்டால் அதிகாரிகளின் மற்ற வேலை சுலபமாகிவிடும். கடுமையான கட்டளைகள் கூட எதிர்ப்பின்றி பணியப்படும். அப்படியில்லாமல், அதிகாரம் என்ற அஸ்திரத்தை மட்டுமே பயன்படுத்தும்போது அவை பல சமயங்களில் முறியடிக்கப்படலாம்; அல்லது உங்கள் பக்கமே திருப்பி விடப்படலாம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

வாழ்க்கையில், நாம் கற்றது கைம்மண்ணளவு

மாற்றங்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் கவனித்து வருவது
அதிகாரியாக இருந்தாலும்ம் சிப்பாயாக இருந்தாலும்
அத்தியாவசிமாகும்
கல்வி எல்லையற்ற ஒரு பெருங்கடல். நீந்த நீந்தக் கடல் வளர்ந்து செல்லும்,. ஓங்கி எழுகின்ற ஒவ்வோர் அலையும் நமக்குச் சொல்வது ஒரே ஒரு செய்திதான். காலம் முழுவதும் நமது கம்வித் தகுதியைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். நேற்று நீங்கள் பெற்ற புகழாரம் இன்று பழையதாகிவிட்டது. இன்று மீண்டும் ஒரு புகழாரம் பெற நீங்கள் பாடுபட வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு அலையும் நமக்கு அறிவிக்கின்றது

இராணுவத்தில் இருக்கும் நமக்கெல்லாம் தெரியும், போர் முறைகள் அன்றாடம் மாறுகின்றன. போரிடுவதற்கான புதுப் புது வழி முறைகளும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்படுகின்றன.
மாற்றங்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் கவனித்து வருவது அதிகாரியாக இருந்தாலும் சிப்பாயாக இருந்தாலும் அத்தியாவசியம். நாளைக்கு எதிரி ஒரு புதிய ஆயுதத்துடன் போரிட வந்தால் அதை எதிர்த்துத் தாக்கி அழிப்பது எப்படி என்று அறிந்திருக்க வேண்டும். 

அதில் தவறினால்கடைகளில் தூங்கினவன் முதல் இழந்தான்; போர்ப் படைகளில் தூங்கினவன் வெற்றி இழந்தான் என்ற கதையாகிவிடும். நாம் அறிந்து கொள்ள வேண்டியவ்பற்றை அன்றாடம் எந்த வகையிலாவ்பது தேடி அறிய வேண்டியது இன்றைய மனிதனுக்கு மிகவும் அவசியம்.
                                                                                                                                                                                                      கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )                                                      

திங்கள், 8 ஏப்ரல், 2013

பயிற்சியின் நோக்கம்


ஒரு இயந்திரத்திற்கு  உபரிப்பொருள் தயாரிப்பது  போன்றதல்ல. இராணுவப் பயிற்சிகள் ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பது போன்றது.



இராணுவப் பயிற்சிகள் கடுமையானவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்தப் பயிற்சிகளின் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் பயில்வது சுலபமாகிவிடும். இது ஒரு இயந்திரத்திற்கு உபரிப்பொருள் தயாரிப்பது போன்றதல்ல. இராணுவப்பயிற்சிகள், ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பதைப் போன்றது. போர்க்காலங்களில் பல திருப்புமுனைகளை மிகச் சாதாரண சிப்பாய்கள் தங்களது கடுமையான உழைப்பாலும் தன்னிகரில்லாத நாட்டுப்பற்றாலும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். போரில் பல சமயங்களில் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடப்பதில்லை. சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் எதிரிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏற்றபடி உடனுக்குடன் முடிவெடுத்து செயலாக்கப்பட வேண்டும். 

தனி ஒரு மனிதனைக் குறி வைத்து எறியப்படும் குண்டுகளைவிட ஒரு குறிப்பிட்ட பகுதியையே அழித்துவிடக் கூடிய AREA WEAPON மலிந்துவரும் இன்றைய நாளில் உயிரோடு இருக்கக்கூடிய கடைசி ஜவான் கூட ஒரு இராணுவதளத்தைக் காப்பாற்றிவிட முடியும். அந்த சாகசங்களுக்கெல்லாம் இத்தகைய பயிற்சிகள் அடித்தளமிடுகின்றன. சவால்களைத் தாங்கும் உள்ளத்தையும் உடலையும் உருவாக்குகின்றன. ஒரே மாதிரியான சூழல்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் புதிய அபாயங்களையும் சவால்களையும் சந்திக்க இயலாது. அவற்றிற்கு மனிதர்களைத் தயார் செய்வதே இப்பயிற்சியின் உள்நோக்கம் என்பதை நினைவில் கொண்டு பயிற்சி செய்யுங்கள். 

நாடு காக்க மிஞ்சி நிற்கிற ஒரே ஒரு  அதிகாரியாகவோ அல்லது , சிப்பாயாகவோ நீங்கள் இருக்கலாம்.     

கர்னல் பா.கணேசன்.. B.Tech. V.S.M. ( ஓய்வு ).

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தொடர் பயணம்

இந்த நடைப் பயணத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான கைவிளக்கு இராணுவப் பயிற்சியும் அதன் காரணமாக ஏற்படும் அறிவு விளக்கமும்

 

வாழ்க்கை ஓர் நீண்ட பயணம். இது எங்கு ஆரம்பித்தது என்பதும் எங்கு முடியும் என்பதும் இறைவன் வகுத்த கணக்கு. நாம் அனைவருமே வழிப்போக்கர்கள். நீண்ட பயணத்தில் இடையில் நுழைந்து இடையிலேயே மறைந்து போகக் கூடியவர்கள். ஆனால் அந்தப் பயணத்தில் நாம் நடக்கிற ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் என்னென்ன அனுபவங்கள்.. எத்தனை மனித அறிமுகங்கள்.. அதுவும் நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நமக்கு இராணுவத்தில் சேராதிருந்தால் இவை கிட்டியிருக்குமா ? என்று யோசித்தால் நிச்சயம் இல்லை என்ற பதில்தான் வரும்.

நமது இந்தத் தொடர் பயணம் சிவிலியன் வாழ்விலிருந்து இராணுவ வாழ்க்கைக்கு நீண்டிருக்கிறது. பிறகும் இது தொடரும். இந்த நடைப் பயணத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான கைவிளக்கு இராணுவப் பயிற்சியும் அதன் காரணமாக ஏற்படும் அறிவு விளக்கமும். இந்தக் கைவிளக்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆண்டவன் சந்நிதியில் நுழைய அங்கீகாரம் பெற்றவர்களுக்கே இந்தக் கைவிளக்கு கிடைக்கிறது. இதைக் கையில் ஏந்திச் சிறப்பான வாழ்க்கைக்கு வழி தேடுங்கள்.   


கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )
 .


சனி, 6 ஏப்ரல், 2013

தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும் !

 உத்தேசத்தில் நீங்கள் சுத்தியோடு இருந்து எதைக் கேட்கிறீர்களோ
அது உங்களுக்குக் கிடைக்கும். நிச்சயமாக  உடனே  அது
கிடைக்கவில்லை என்றால் இறைவனின் கருணையை
இடைவிடாது தேடிக்கொண்டே இருங்கள்.

 ’தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது ஒரு ஞான குருவின் வாசகம். கதவு மூடப்பட்டிருக்கும்போது தட்டவேண்டும் என்பதும், கிடைக்காதபோது தேடவேண்டும் என்பதும், தேவையானபோது கேளுங்கள் என்பதும் அதன் தொடர்பான மணி மொழிகள். இந்த வாசகம் கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வரிசையில்தான் அமைந்திருக்கின்றன. இறைவன் எல்லோர்க்கும் எல்லாமும் வாரி வழங்கும் வள்ளல். உங்கள் தேவைகள் என்னவென்று அவன் நன்றாய் அறிவான். பொதுவாக மனிதர்களாகிய நாம் அறிவு மயக்கத்தால் தேவை எதுவோ அதை விட்டு விட்டுத் தேவையில்லாததைதான் கேட்போம். தேடுவோம். அதற்காக ஆலயத்தின் கதவுகளைத் தட்டுவோம். தேவையானது கிடைக்கவில்லையே என்று மனதை அலட்டி அலட்டி வருத்தப்படுவோம்.

உண்மையிலேயே உங்கள் அத்தியாவசியத் தேவை என்ன என்று உங்களுடைய அடிமனதிற்கு நன்றாகத் தெரியும். அதைக் கேளுங்கள். இறைவனிடம் கேளுங்கள். அவன் இல்லையென்று மறுப்பதே இல்லை. நீங்கள் மீனைக் கேட்டால் எந்தத் தந்தையாவது பாம்பையா உங்களுக்கு வழங்குவார் ? உத்தேசத்தில் நீங்கள் சுத்தியோடு இருந்து எதைக் கேட்கிறீஈர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும் நிச்சயமாக. உடனே அது கிடைக்கவில்லை என்றால் இறைவனின் கருணையை இடைவிடாது தேடிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து உங்கள் கரங்கள் இறைவனின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கட்டும். கிடைக்கவேண்டியது தானே உங்களுக்குக் கிடைக்கும்.
 
கர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

 


வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே ?

வெற்றிச் சிகரத்தின் வாயில்களை அடைய நடக்கும் பயணத்தின்  
அனுபவம் என்ன ? அது தோல்வியாகத்தானே இருக்க வேண்டும் ? 

தோல்வி என்ற சொல் நமது வாழ்க்கை வேள்விக்குப் பொருளற்றதாகும். தோல்வி என்பவை எல்லாம் தோல்விகளே அல்ல. அவைகள் எல்லாமே வெற்றிக்குப் போடப்பட்ட படிக்கட்டுக்களே. வாழ்வில் பலரும் பல வழிகளில் வெட்கப்படத்தக்க வெற்றிகளை அடைகிறார்கள். வெட்கப்படத்தக்க வெற்றி வாழ்க்கையின் இறுதிவரை மனசிற்குள் தீராத உறுத்தலையே தரும். வெளியே நம்மைப் போற்றிப் புகழ்பவர்களாகத் தோற்றமளிப்போர் நம்மை விட்டுக் கிளம்பியதும் தூற்றியே தீருவர். அதே போல் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கும் சிலர் பெருமைப்படத்தக்க தோல்விகளைக்கூட அடையலாம். ஆனால், அந்தத் தோல்வி கம்பீரமாகவே கருதப்படும்; போற்றப்படும். இராணுவ வாழ்க்கையில் வெற்றி பெறும்போது  பொங்கி மகிழ்வதும் தோல்விகளைக் கண்டு அதிர்ந்து வருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.   

வெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே ? அதை அடைய நடக்கும் பயணத்தின் அனுபவம் என்ன ? அது தோல்வியாகத்தானே இருக்க வேண்டும் ? வெற்றியின் சிகரத்தை எட்டப் பயணம் புறப்பட்டோர் தோல்விகள் என்ற படிக்கட்டுக்களைக் கண்டு மயங்கிச் சோர்ந்துவிட்டால்,, சிகரத்தை எட்டுவது எப்படி ? இராணுவத்தினராகிய நம்மிடையே தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடும் சின்னமே இருக்கலாகாது. இன்றையத் தோல்வி. அதோ நாளை காத்திருக்கிறது வெற்றிச் சிகரத்தின் வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு என்று துவளாமல் முன்னேறுவோம்.

கர்னல் பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு ).