சனி, 24 மார்ச், 2018

                                                    அந்த குழந்தையே 
                                                இந்த மனிதனின் தந்தை.
                                                              (The child is the Father of the man)
             எண்ணத்தளவே வாழ்க்கை என்பது மறை மொழி .மனிதனின் செயல்பாடுகளுக்கு அவனது எண்ணங்களே அஸ்திவாரமாக இருக்கிறது என்பார்கள்.எண்ணத்தில் தோன்றாதது எதுவும் செயல் வடிவம் பெறுவதில்லை.
                   அதே சமயம் மனதில் தோன்றும் தீவிர எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதும் ஆன்றோர்கள் வாக்காகும்.
                  "பல வேடிக்கை மனிதர்களைப்போல் நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ "என்ற பாரதியின் பாடலை மனதில் கொண்டு எனது வாழ்க்கை சாதாரண மனிதர்களைப்போல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்த போது  கனவிலும் நினைத்திராத இராணுவ வாழ்க்கையில் நுழைகிறேன்.
                அந்த இளம் மனதில் தோன்றிய எண்ணங்களைப்பாருங்கள்.

             இராணுவ வாழ்க்கைதான் நான் செல்ல வேண்டிய பாதை என்று நடக்க ஆரம்பிக்கிறேன்.எல்லைப்புற வாழ்க்கை,இயற்கைப்பேரிடர்கள்  போர்க்களம் என்று காட்டுத்தீயில் புகுந்து வரும்பொழுது நான் வைரமா? இல்லை கரிக்கட்டையா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
                          அன்று நான் எழுதியதைப்  பாருங்கள்.


                        32 வது  வயதில் அடியெடுத்து வைத்த பொழுதுகூட எனக்குத் திருமணம் என்ற ஒன்று நடக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.கடமையின் பொருட்டு முரட்டுப் போர்வை போர்த்திக்கொண்டாகிவிட்டது.இந்த போர்வைக்குள்ளே ஒரு அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கித்தவிக்கும் குழந்தையுள்ளம் இருக்கிறது என்பதைப் பார்ப்போர் எப்படிப்புரிந்து கொள்வார்கள்.
             அன்னை மறைத்துவிட்டார் .பள்ளிக்கூடம் பார்த்திராத தந்தை.தம்பிக்கும் திருமணமாகி நான்கு வயதில் தம்பி மகன், அண்ணன் தம்பிகளுக்கு அவரவர்கள் பிரச்சினை; ,இந்நிலையில் யார் எனது மணம் பேசப்போகிறார்கள்?
                  அன்பால் ,அழகால்,நல்ல குண நலன்களால் என்னைத் தன் வசமாக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணை சந்திக்க முடியாவிட்டால் எனது திருமணம் கானல் நீர்தான்  என்று எழுதி வைத்தேன்
                எனது திருமணம் எனது பெற்றோர்களின் முடிவு என்றொரு பெண் காத்திருந்தாள் .மாப்பிள்ளை என்று என்னை  சந்தித்த அவளது பெற்றோர்கள் எனது ஊர் ,குடும்பம் உறவுகள் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இராணுவத்தலைமையகத்தில் எனது விபரங்களைப்பார்த்து  இவர்தான் தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மணமகன் என்று முடிவு செய்தார்கள்.
                         இதைத்தான் "விதி " என்பதோ.

            1974 ம் ஆண்டு தை பூசத்   திருநாளில் (Feb 06,1974) அனந்தலக்ஷிமி என்ற கற்பகத்  தரு எனது வாழ்க்கைத்துணைவியாகிறாள்.
                         இருளடைந்திருந்த எனது வாழ்க்கையில்  ஒளிவெள்ளம் பரவுகிறது.
                                                         வாழ்க்கை வாழ்வதற்கே

           கால வெள்ளம்  சில பசுஞ்சோலைகளைப் பாழிடமாக்கி விடுகிறது;சில பாழிடங்களைப் பசுஞ் சோலைகளாக்கி விடுகிறது.
                   எனது வாழ்க்கை எனும் பூஞ்சோலை பூத்துக் குலுங்குகிறது.எங்களது இல்லற சோலையில் இரு நறுமலர்களாக ஆண்குழந்தைகள் தோன்றுகிறார்கள்.




          எங்களது வாழ்க்கை நிறைவட்டமாகிறது.