திங்கள், 18 ஜனவரி, 2021

                              மனம்  ஒரு மாயக்கண்ணாடி. 

எனது தென் துருவ அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரவேண்டும் என எடுத்துக்கொண்ட முயற்சிகள் 2007 ம் ஆண்டு '"வெண்பனிப்பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் " என்ற நூலாக m/s பழனியப்பா பிரதர்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.ரூ.150/ என்று விலையிடப்பட்டது.எழுதியவன் என்ற முறையில் எனக்கு இரண்டு புத்தகங்கள் இலவசமாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குள் பதிப்பகத்தாருக்கு 7500 பிரதிகளுக்கு ஆர்டர் கிடைத்தது.என்னை  அழைத்து ரூ25000/கொடுத்தார்கள்.

          பணத்தை எதிர்பார்த்து நான் எழுதவில்லையாதலால் மகிழ்வுடன் வந்துவிட்டேன்.தமிழ்நாட்டின் மூளை,முடுக்கெல்லாம் இந்த நூல் சென்றுவிட்டது.நாள் ஆக ஆக முன் பின் அறிமுகமில்லாத பலர் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.மிகவும் நேர்மையான இராணுவ வாழ்க்கை ஆழ்மனதில் பதிந்து விட்டதால் உண்மையை உண்மை என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் ஏற்பட்டதில்லை.

                  200 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் பல இடங்களில் அன்றைய அரசாங்க செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.தென் துருவப் பயணம் புறப்பட்டு 7-8 நாட்களில் கப்பல் பூமத்தியரேகையைக்கடந்து போய்க்கொண்டியிருந்தது.அப்பொழுது கப்பலிலிருந்து இந்திய தென் துருவ ஆய்வுத்தளம்"தக்க்ஷிங்கங்கோத்ரியை"த்தொடர்புக்கொண்டோம்.அப்பொழுது அங்கிருந்த தலைவரிடம் எனப்பற்றி சொல்லி எனது மகிழ்ச்சியைத்தெரிவித்தேன்.அதற்கு அவர்,அண்டார்க்டிக்கா ஒரு வெண்பனிச்சுடுகாடு,இங்கு வருவதற்கு ஏன் இப்படித் தவிக்கிறாய் ?என்றார்.நான் போனை வைத்துவிட்டேன்.அப்பொழுது ஏற்பட்ட எனது மனநிலை பற்றி நூலில் இப்படிக்குறிப்பிட்டிருந்தேன்,

           "எவன் ஒருவன் தனது பணியில் வேண்டாவெறுப்புடன் செயல்படுகிறானோ,அவன் விபச்சாரியைவிட மோசமானவன்.ஒரு மாபெரும் தேசத்தின் பிரதிநிதியாக உலக அரங்கில் அறிமுகப்படுத்தப் படுபவன் எவ்வளவு பெருமைப்படவேண்டும் ?நான் அன்றே முடிவுசெய்தேன்,என்னுடைய தலைமையில் இயங்கப்போகும் இந்தியாவின் ஐந்தாவது குளிர்காலக்குழு உலக வரலாறு படைக்கும்.எனது குழுவின் (மொத்தம் 15 பேர் )ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களது வாழ்க்கையின் ஒரு அற்புத பகுதியாக இந்த காலம் அமையும் ." 

               நூல் முழுவதும் செயல்பாடுகளின் விளக்கமும் இடையிடையே மனோதத்துவ கருத்துகளும்  இழையோடியிருக்கும்.இந்த நூலைப் படித்த ஒரு அன்பர் விருத்தாச்சலத்திருந்து தொலைபேசியில் அழைத்து சுமார் 40 நிமிடங்கள் பேசினார்.மிக அற்புதமான உரையாடல் அது.இன்றுவரை அவரை நான் சந்திக்க வில்லை.

                         இன்று (17-01 2021) காலை "தினமணி "நாளிதழ் படிக்கையில் மின்னல் போல் ஒரு வெளிச்சம் உள்ளத்தில் பரவியது."வாசிப்புக்கு விருந்து" என்ற தலைப்பில்  அவரைப்பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது ஆம்.சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனது நூலைப்படித்துப் பாராட்டிய அந்த மா மனிதர் "பல்லடம் மாணிக்கம் "அவர்கள்தான்.

                      

           தினமணி ஒரு தரமான பத்திரிக்கை என்பதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான கட்டுரைகளும் தமிழ் மணி என்ற இலக்கிய பகுதியும் நான் விரும்ம்பிப் படிப்பேன்.

                      என்றாவது ஒருநாள் எனது சமூக ஆர்வம் பற்றியும் எனது நூல்கள் பற்றியும் தினமணியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.


                  பல்லடம் மாணிக்கம் அவர்கள் நூறாண்டுகாலம் நிறைவோடு வாழ இயற்கைத்துணைபுரிய பிரார்த்திக்கிறேன்.























1 கருத்து:

  1. தினமணிக்கும் பிற இதழ்களுக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம். உங்கள் எண்ணம் ஈடேற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு