செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்:

                               அறிவுத் திருக்கோவில் திறப்பு விழா . 

       பரம்பொருளே இயக்கத்தில் உயிராகி ,உயிர் திரட்சியில் பஞ்ச பூதங்கள்,பேரியக்க மண்டலம் ,உலகம்,உடல் இவைகளாகி உயிர் உடலோடும் உலகத்தோடும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளோடும் மெய்ப்பொருளோடும் தொடர்புகொண்டு இயங்கும்போது அறிவாகவும் இயங்குகிறது.இந்த இயக்கத்தைப் புரிந்துகொண்டால் அறிவே பரம்பொருள் என்ற உணர்வு பிரகாசிக்கும்.
                       எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன என்பது எண்ணற்ற உளவியல் வல்லுநர்கள் கண்டறிந்தது.இன்றும்கூட மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடக்கின்றன.
                    மனம் நம்புவதை உடல் செயலாக்குகிறது.இந்த சக்தி அவனுள்ளேதான் இருக்கிறது.ஆனால் அந்த ஞானப்பெட்டகத்தைத் திறக்கும் சாவிதான் நம்பிக்கை.அந்த நம்பிக்கை ஆகாயத்தில் கட்டும் கோட்டையாக இல்லாமல் சில உண்மைகள் என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்படும் கற்சுவர்களாக இருக்கவேண்டும்.
                    இந்த அடிப்படையில்தான் 


                                  Dr.அழகர் ராமானுஜம் திறந்துவைக்கிறார்.

   திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் அவர்களால் அகத்தூண்டுதல் வளாகத்தில் அறிவுத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
          கர்னல் கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய இந்திய கடற்படை அதிகாரி ராஜ்குமார் அவர்களின் துணைவி விளக்கு ஏற்றுகிறார்.இரு புறமும்  கணேசனும் அவரது துணைவியாரும் .

                  முன்பே அறிவித்தபடி விழாத்தலைவரும் மற்ற விருந்தினர்களும் 17-5-2017  புதன்கிழமை காலை பத்து மணியளவில் ஒருங்கிணைய விழா இனிதே தொடங்கியது.
                கணேசனுடன் அண்டார்க்டிகாவில் பணியாற்றிய மற்றோர் இராணுவ அதிகாரி  ராஜன் அவர்கள் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.
                  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராமன் ,சென்னையிலிருந்து காவல் ஆய்வாளர் (ஒய்வு )செல்வராஜ் காரைக்காலிருந்து திரு .வேதாச்சலம் மற்றும் ஏராளமான நண்பர்கள் உதவியுடன் விழா இனிது நடந்தது.
                     நன்னிலம் காவல் கண்கானிப்பாளர் திரு அருண் அவர்களும் கரந்தை ஜெயக்குமார் அவர்களும் வாழ்த்தினார்கள்.
                       இந்த விழாவின் நோக்கம் மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் அவனது செயல்பாடுகளை எந்த புற  காரணிகளும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் இன்றைய இளையோர் மனதில் பதியவைப்பதேயாகும் .
                   வருங்காலத்தில் சன்னாநல்லூரைச் சுற்றியிருக்கும் கிராம மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்கள் சரித்திரம் படைப்பார்கள் என்று எதிர்பார்ப்போம் .



            விழா சிறப்பாக நடைபெற உதவிய எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றி .
         மாலையில் சென்னை வானொலி நிலைய காரைக்கால் பகுதி அதிகாரிகள் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் கர்னல் கணேசனை நேர்காணல் நடத்தி பெருமை சேர்த்தார்கள்.அவர்களுக்கும் நன்றி.
 














1 கருத்து:

  1. அற்புதமான விழாவினை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தமையினை எண்ணி மகிழ்கின்றேன் ஐயா.

    பதிலளிநீக்கு