புதன், 21 பிப்ரவரி, 2018


                                இராணுவத்தில் வீர விளையாட்டுகள்.
                              ( Adventure sports in the Army)
    இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு..இராணுவம் என்றதும் துப்பாக்கி ஏந்தி போரிடுவதுதான் அவர்களது வேலை என்றுதான் பரவலாக நம்பப்படுகிறது.
                   உடலளவிலும் மனதளவிலும் ஒரு இளைஞனை தயார்படுத்திய பிறகு அவனுக்குப் போர்க்களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை வருடங்கள் போல் ஆரம்பகாலப் பயிற்சிகள் முடிந்தபிறகு அவர்கள் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.அதிகாரிகளும் அதிகாரிகளல்லாதோரும் ஆரம்பகாலப் பயிற்சிகளை தனித்தனியாக செய்திருந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் அவர்கள் இணைந்தே பணியாற்றுகிறார்கள்.
                  உலகில் உள்ள எல்லா விளையாட்டுகளும் இராணுவத்திலும் உள்ளன.இதில் சிறப்பாக உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்புப்பயிற்சியளிக்கப்படுகிறது. இவர்கள் இந்தியத்திருநாட்டின் பிரதிநிதிகளாக உலக விளையாட்டு அரங்கங்களான ஒலிம்பிக் ,ஆசிய விளையாட்டுப்போட்டி போன்றவைகளில் பங்கு கொண்டு நாட்டுக்கும் தங்களுக்கும் தாங்கள்  சார்ந்த படைப்பிரிவிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.
          இவைகள் தவிர வீர விளையாட்டுகளும் இருக்கின்றன.உதாரணமாக ;

       1.)பாராசூட்டிலிருந்து குதிப்பது.
          Para jumping.

 



       2)பாராசூட் பயிற்சியில்லாதவரும் விண்ணில் பறப்பது.
         Para sailing/Glaiding

       3)மலை ஏறுதல் 
          Mountaineering.

       4)  ஆழ் கடலில் நீந்துதல்.
              Ocean swimming.

        5)ஆழ் கடல் பாய்மரப்  படகுப் பயணம்.
          Deep sea sailing.

        6)தென் துருவ ஆய்வுப் பணி .
                 Antarctic Expeditions

 

         7)ஐக்கிய நாட்டு அமைதிப்பணி.
                 United Nations Peace Keeping Force.

         8)பனி,மற்றும் பனிப்புயல் ஆய்வுகள்.
              Snow and Avalanches Study 
.
         9)விண்ணிலிருந்து பாய்வது.
               Sky Diving

         10)ஆழ்கடல்  மூழ்குதல் 
               Deep Sea Diving

     உலகம் சுற்றிய  பாய் மரப் படகு பயணமாக சில ஆண்டுகளுக்குமுன் இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஒரு வருடம் போல் கடலில் பயணித்து சாதனை நிகழ்த்தினார்கள்.
               இப்பொழுது இந்திய கடற்படை மகளிர் அதிகாரிகள் ஆறு பேர் அது போன்ற உலகம் சுற்றும் கடற்பயணத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அநேகமாக வரும் மார்ச் மாதம் பயணத்தை முடிப்பார்கள்.
           உறை  பனி கண்டம் என்று சொல்லக்கூடிய அண்டார்க்டிக்காவில் இந்தியா ஆய்வுத்தளம் அமைத்து உலக நாடுகளுக்கு இணையாக ஆய்வுகள் நடத்தி வருகிறது.உலகிலேயே கொடுமையான குளிரும் (-90*c) வருடம் முழுவதும் வீசும் பனிக்காற்றும் அதிகபட்சமாக 350Km/hr  நிரம்பிய இடமது.ஒவ்வொரு குளிர்காலக்குழுவும் ஒன்றரை வருடங்கள் அங்கு தங்கி ஆய்வுப்பணியும் பராமரிப்புப் பணிகளும் செய்து திரும்புகின்றன.
              இப்படிப்பட்ட குழுவுக்கு தலைவராக கர்னல் கணேசன் என்ற பொறியாளர் படைப்பிரிவு அதிகாரி தேர்வு செய்யப்பட்டார்.பலவிதமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இவர்தான் தலைவர் என்று அறிவித்தபிறகு தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர்  சென்று தான் பிறந்த மண்ணை ஒருபிடி எடுத்துக்கொண்டார்.
                      இந்த தாய் நாட்டு மண் இந்தியத் தென் துருவ  ஆய்வுத்தளமான தக்ஷிண் கங்கோத்திரி சுற்றி தூவி தனது பணியை ஆரம்பித்தார்.உலக அளவில் பாராட்டும்படி தனது பணியை முடித்து ஒன்றரை வருடங்கள் முடிந்து திரும்புகையில் அங்கிருந்து சுமார் ஒரு டன்  எடையுள்ள கற்பாறைகள் சிலவற்றை தமிழகம் கொண்டுவந்தார்.
                       இந்த கற்பாறைகள் சுமார் பத்து அடி  உயர கான்கிரீட் தூண்கள் மீது நிறுத்தப்பட்டு "அகத்தூண்டுதல் பூங்கா "என்று பெயரிடப்பட்டுள்ளது.   
                      அவ்வப்பொழுது மனவள பயிற்சி ,உந்துசக்தி முகாம் ,யோகா போன்ற பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு அருங்காட்சியகமும் மன  வள நூல்கள் நிறைந்த ஒரு நூலகமும் இருக்கின்றன.பயிற்சி  காலத்தில் இலவச சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது.
                   வாழ்வில் முன்னேறவேண்டும்,சாதனைகள் புரியவேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் பயிற்சிக்கு வரலாம்.
                  பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதுடன் சிறப்பானப் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் மேலும்  சாதனைகள் புரிய வழிகாட்டுதலும் கொடுக்கப்படுமின்றன.


                       




 

சனி, 13 ஜனவரி, 2018


                            உருவமற்ற குரல்..........7

         சென்னையில் இராணுவ மருத்துவ மனை செயின்ட் தாமஸ் மவுண்ட் ல் இருக்கிறது.மருத்துவமனையில் சேர்ந்த 2-3 நாட்களில் கால் கட்டு பிரிக்கப்பட்டு  எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.கால் சரியாகிவிட்டது என்று Re medical categorization board நடத்த உத்திரவு இடப்பட்டது.
                  எதோ காரணத்தால் அது கால தாமதமாக இடையில் 1965 ம் ஆண்டு தீபாவளி வந்தது.கிராமத்தில் பெற்றோர்கள் கணேசன் ஒரு காலை இழந்துவிட்டான்  என்ற நினைவிலேயே இருந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையில் போக விரும்பினார் .ஆனால் விடுமுறை மறுக்கப்பட்டது.
                         காலையிலிருந்து இரவு வரை அவுட் பாஸ் இரண்டு நாட்களுக்கு எழுதிவிட்டு கணேசன் பெற்றோரைப் பார்த்துவர போய்விட்டார்.இரவு பணிக்கு வந்த டாக்டர் கணேசன் மருத்துவமனையில் இல்லாதது குறித்து புகார் எழுதிக்கொடுத்துவிட்டார்.
                     மறுநாள் காலை இராணுவ தலைமையகத்திற்கும் காவல் நிலையங்களுக்கும் இராணுவ விதிமுறைப்படி "இராணுவ அதிகாரி ஓடிப்போய்விட்டார் " என்று தந்தி கொடுத்துவிட்டார்கள்.
                     மூன்றாம் நாள் காலை கணேசன் மருத்துவமனை வந்தார்.இராணுவ விதிகளின்படி அவர் குற்றவாளியாக உயர் அதிகாரிமுன் நிறுத்தப்பட்டார்.அதிகாரி Lt.Col Venkitaachalam கோபமாக ஏன் ஓடிப்போனாய் என்று கேட்டார்.கணேசன் போரில் அடிபட்டது, மூன்று மருத்துவமனை சுற்றியது,கிராமத்தில் பெற்றோர்களின் நிலை எல்லாவற்றையும் சொல்லி விடுமுறை மறுக்கப்பட்டதால் தான் ஊருக்குப்போய் பெற்றோர்களை பார்த்து வந்ததாக சொன்னார்.
                     கோபத்தோடு ஆரம்பித்த அதிகாரி கணேசன் மீது பரிதாபப்பட்டு உடனே அவரை  டிஸ்சார்ஜ் செய்யும்படிஉத்திரவிட்டார்.போர்க்களத்திலிருந்து
வெளிவந்தவர்களை திரும்பவும் அங்கு அனுப்ப முடியாது.பயிற்சி தளமான பெங்களூருக்குத்தான் அவர் போயிருக்க வேண்டும்.அனால் தவறாக அவரை அவரது படைப்பிரிவுக்கே அனுப்பிவிட்டார்கள்.
                      அவரது படைப்பிரிவு போரில் மகத்தான வெற்றி பெற்று பாகிஸ்தானுக்குள் சுமார் 20 கி.மீ.சென்று விட்ட நிலையில் போர் நின்றது.

                               


கணேசன் தனது படைப்பிரிவை கண்டுபிடித்து போய்ச்சேர்ந்தார். சியால்கோட் என்ற பாகிஸ்தான் பெரு நகரம் 20 கி.மீ.தூரத்திலிருக்குமிடத்தில்  அவர்கள் இருந்தார்கள். 
                  சுமார் ஒரு மாதம் போல் வெற்றிபெற்ற இடங்களில் சுற்றி வேலைகள் செய்தார் கணேசன். 1966 ம் ஆண்டு ஜனவரி 9 ம் நாள் ரூர்கி பல்கலைக்கழக த்தில்   ஆரம்பிக்கும் ஒரு பயிற்சிக்கு அவரை நியமித்து உத்திரவு வந்தது.
                இந்தியாவிலேயே பொறியியற் படிப்புக்கு பல்கலைக்கழகமாக இருக்கும் ரூர்கிக்கு வந்து சேர்ந்தார் கணேசன். 

















  

புதன், 10 ஜனவரி, 2018


                  காலத்தால் அழியாத கல்வெட்டு 

          கணேசன் 1961 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையில் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார்.பட்டுக்கோட்டை யில் பணியில் சேர்ந்த அவர் பின்னர் ஆவுடையார்கோவில் ,பேரளம் ,கொரடாச்சேரி போன்ற ஊர்களில் பணியாற்றிவிட்டு 1962 ம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் மெலட்டூர் என்ற இடத்தில் கட்டப்படவிருந்த  Conversion of an Anaicut into a Regulator என்ற வேலைக்கு மாற்றப்பட்டு  மெலட்டூர் வந்து சேர்ந்தார்.
                     வெட்டாற்றின் குறுக்கே இது கட்டப்படவிருந்தது.விவசாயம் முடியும் தருவாயில் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நீர்வரத்து நிறுத்தப்பட்டு  ஏப்ரல் -மே  மாதங்களில் வேலை முடிந்து நீர் திறந்துவிட வேண்டும்.
                 ஆற்றின் கரையிலிருந்த ஆய்வு மாளிகை கணேசனது தங்குமிடமாக மாற்றப்பட்டு வேலை ஆரம்பமானது.
                        அன்றைய தஞ்சாவூர் காங்கிரஸ் பிரசிடெண்ட் தான் ஒப்பந்தக்காரர்.எந்தவித பிரச்சினையுமில்லாமல் வேலை நடந்து முடிந்தது.



செலவிடப்படாத சுமார் 2000 மூட்டை சிமெண்ட்டை ஒப்பந்தக்காரர் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.இதை எதிர்த்த எனக்கு அது காண்ட்ராக்ட் வேலை என்பதால் கணக்குப்படியான சிமெண்ட் அவருக்கு தரவேண்டியதுதான் என்கிறார்கள்.
                  மிகவும் உன்னிப்பான கவனத்தினால் ஏற்பட்ட மீதமான சிமெண்ட் டிபார்ட்மெண்ட்க்குத்தான் சொந்தம் என்ற எனது வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
                  மனம் வெறுப்படைந்த கணேசன் தண்ணீர் திறக்கும் நாளன்று நூறு இரண்டு ரூபாய் நோட்டுகளை ஆற்றில் வீசிவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.



                                 தஞ்சை நண்பர் தங்கமுத்து அவர்களுடன்

                 ராஜினாமாவை ஏற்காத அவர் உயர் அதிகாரி 1962 அக்ட்டோபர் - நவம்பரில் நடந்த சீன -இந்தியப்ப் போரையும் அதனால் ஏற்பட்ட அவசரகால நிலையையும் நினைவுபடுத்தி கணேசனை இராணுவத்திற்கு விண்ணப்பிக்கத் தூண்டினார்.
                 அதுவே கணேசன் வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.இராணுவத்தேர்வுகள் கடுமையாக இருந்தாலும் அவர் தேர்வு பெற்று  1963 ம் ஆண்டு அக்டொபர் 9 ந்தேதி இராணுவப் பயிற்சியில் சேர்ந்து 1964 ம் ஆண்டு மே மாதம் 3 ம் நாள் பெருமைமிகு இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.
           இராணுவ வாழ்வில் இடை இடையே விடுமுறையில் வரும்போது தவறாமல் மெலட்டூர் சென்று தான் கட்டிய ரெகுலேட்டர் எப்படி இருக்கிறது என்று பார்த்து வருவார்.
             இன்று 2018 ம் ஆண்டு,55 ஆண்டுகள் ஆன  அவரது வேலை காலத்தைக்கடந்த கல்வெட்டாக நின்றுகொண்டிருக்கிறது.
                          இதோ ! அது உங்களுக்காக. !






                        இராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி இந்தியாவின் அண்டார்க்டிக்கா ஆய்வு தள  தலைவராகப் பணியாற்றி,குடியரசு தலைவரின் விருது பெற்று கணேசன் 1994 ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.





 குடியரசு தலைவர் விருது "வஷிஷ்ட்ட சேவா மெடல் "வழங்கப்படுதல்.

                                                             26 ஜனவரி 1994.




 

                          சக்கரம் சுழல்கின்றது.... 
                           அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது....

             பொதுப்பணித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த கணேசன் 1964 ம்  ஆண்டு  May 03 ம் நாள் இராணுவத்தில் அதிகாரியாக மாற்றம் பெற்றார்.44 Field Park Company என்ற படைப்பிரிவில் பணி தொடங்கியபின் அது 4 Engineer Regiment என்று 02 june 1966 அன்று உரு மாற்றம்பெற்றது.
                காலமெனும் காட்டாறு கரைபுரண்டோடியது.1965 ல் பாகிஸ்தானுடனான போர் ,பின்னர் 1971ல் பங்களாதேஷ் தனி நாடான போர் என்றும்  அதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1969ல் தனது பொதுப்பணித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இராணுவத்தில் நிரந்தர அதிகாரியானார்.
               பலமுறை இதே படைப்பிரிவுடன் பணியாற்றிய கணேசன் 1984 ம் ஆண்டு இந்த 4 Engineer Regiment ன் தலைவரானார்.அவருடைய மூன்றாண்டு தலைமையில் பல இளம் அதிகாரிகள் படைப்பிரிவில் சேர்ந்தார்கள்.அதில் ஒருவர் 2 L/t M N Devaya.



                  இராணுவப் பொறியியற்கல்லூரியில் இளம் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் அதிகாரியாகப் பணியாற்றியிருந்த கணேசன் தன்னுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவொரு அதிகாரியையும் வருங்கால ஜெனெரல் ஆபீசர் என்றே நடத்தியிருக்கிறார்.




                             
                                      அன்றய கர்னல் கணேசன் மற்றும் தேவையா

                     காலம் உருண்டோட கணேசன் 1994 ம் ஆண்டு பணி  ஒய்வு பெற்றார்.
அவரிடம் பணியாற்றியவர்கள்  காலப்போக்கில் உயர்ந்து பல நிலைகளில் ஒய்வு பெற்றார்கள்.
                      இந்நிலையில் கணேசனுடைய மூத்த மகனும் இராணுவத்தில் அதிகாரியாகி அதே 4 Engineer Regiment ல் பணியாற்றி தற்பொழுது Lt Colonel  என்ற பதவியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
                  தங்களது மகனுடைய குடும்பத்துடன் சில நாட்கள் செலவிட பயணித்த கணேசனுக்கு ஒரு ஆச்சரியமும் அதிசயமும் அங்கு காத்திருந்தது.ஆம்.
                 அன்று அவர் தலைவராக இருந்த படைப்பிரிவு  அருகிலேயே தான் அவருடைய மகன் ஆனால் வேறொரு இடத்தில் பணியாற்றுகிறார்.இதில் பெரு மகிழ்ச்சி என்னவென்றால் அன்று அவரிடம் பணியாற்றிய  2 Lt Dvaya  அவர் எதிர்பார்த்தவிதமே மேஜர் ஜெனரல் என்ற உயர் பதவியில் பக்கத்திலேயே பணிமாற்றம் பெற்று வந்திருந்தார்.




              The Commanding Officer and his Subaltern

                   சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்ததுபோல்  கணேசன் எல்லோரையும் சந்தித்து மகிழ்ந்தார்.
                       2018 ம் ஆண்டு முதல் நாள் மேஜர் ஜெனரல் அவர்கள் தனது அதிகார இல்லத்தில் கணேசனுக்கும் அவரது துணைவியாருக்கும் விருந்து கொடுத்து மகிழ்ந்தார்.கணேசன் மகனும்  அவரது படைப்பிரிவின்  இன்றைய தலைவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள் .
                                               First and second Generations



செவ்வாய், 9 ஜனவரி, 2018


                                     உருவமற்ற குரல்......6

              போர் நடந்துகொண்டிருந்ததால் ரயில் எந்தவிதமான வெளிச்சமுமில்லாமல் ஹெட் லைட் இல்லாமல் புறப்பட்டது.இடையில் ஓரிரு இடங்களில் பாகிஸ்தானின் விமானப்படை தாக்குதல்களினால் சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
                     ரயில் டெல்லி  வந்து சேர்ந்தபொழுதுபகல் சுமார் 10.00 மணியிருக்கும் .யாரும் ரயிலிலிருந்து இறங்கவேண்டாம் என்று உத்திரவு இடப்பட்டது.
              அன்று காலை அமிரித்சாரிலிருந்தும் பேராஸ்புரிலிருந்தும் போர்க்காயங்களுடன் இரண்டு மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி வந்திருப்பதால் டெல்லி மருத்துவமனைகளில் இடமே இல்லை என்றார்கள் .கணேசன் வந்திருந்த மிலிட்டரி ஸ்பெஷல் வண்டியை அப்படியே லக்னோவுக்கு திருப்பிவிட உத்திரவிட்டார்கள் .
                    சுமார் 3-4 நாட்கள் ரயில் பயணத்திற்குப் பிறகு லக்னோ வந்து சேர்ந்தோம்.ரயில்வே ஸ்டேஷனில் எல்லோருக்கும் மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.எதிரிகளுடன் மோதி பலர் உயிர் தியாகம் செய்திருக்க,ஏராளமானோர் விதம் விதமான படுகாயங்களுடன் பிழை த்திருக்க,இவர்களுடன் விமானதாக்குதலினால் சிறு காயத்துடன் உயிர்பிழைத்த நானும் இருக்க நேர்ந்தது இறைவனது திட்டம் போலும்.



                     Image result for indian military injured soldiers bandaged legs-hands


                    லக்னோ இராணுவ மருத்துவ மனையும் இட நெருக்கடியில் திணற  இரண்டுநாளில் அவசிய மருத்துவ உதவி தேவையில்லாதவர்களையெல்லம் உடனடியாக மருத்துவ விடுப்பில் அனுப்ப முடிவானது.
                       இதில் முதல் ஆளாக கணேசன் பெயர் வந்தது.எந்தவிதமான விசாரிப்புமில்லாமல் தெரு ஓரத்தில் வீழ்ந்து கிடக்கும் அநாதை போல் கிடந்த கணேசனை விடுமுறை முகவரியும் அருகாமையிலுள்ள இராணுவ மருத்துவ மனையும் கேட்டார்கள்.
                  கணேசன் எங்கு போவார் ?.சன்னாநல்லூர்  கிராமம்.வயல்வெளிகளில் காலைக்கடன்களை முடித்து,வாய்க்கால் குளங்களில் குளித்து வளர்ந்தவர்....காலில் பெரிய கட்டுடன் இருக்கிறார்.
                      திருமணமான ஒரு அண்ணன் கடலூரிலும் அக்காள் திருச்சியிலுமிருக்கிறார்கள்.எங்கு போனாலும் அவர்களுக்கு சுமையாகவே இருக்கவேண்டும்.
                       தனது படைப்பிரிவு போர்க்களத்தில் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.பதான்கோட்டில்தான் அவர்களது கடைப்பகுதி இருக்கவேண்டும்.அங்கு கணேசனிடம் மரியாதையுள்ள ஜவான்களிருப்பார்கள்,ஆகையினால் கணேசன் பதான்கோட் போக முடிவெடுத்து முகவரி சொன்னார்.
                      இராணுவ அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.அதிகார ரெகார்ட் படி அவர் சென்னை தான் போகவேண்டும் என்று சென்னைக்கு ரயில் வாரண்ட் கொடுத்து அவரை சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள்.
                     புறநானூற்றின் பாடல்களெல்லாம் படை திரட்டல்,போர்க்களம் ,விழுப்புண்,போர்க்களத்திலிருந்து திரும்புதல் போன்ற பாடல்கள் நிறைந்தன .
தென்னகத்தின் பண்டைய வீர வரலாற்றைக்காட்டி நம்மையும் வீரஞ்செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு என்றால் மிகையில்லை. ...
                 கலிங்கப்போரிலிருந்து திரும்பும் வீரர்களுக்காக கடைதிறப்பு பாடுகிறார்  செயங்கொண்டார்.
              இப்படிப்பட்ட கற்பனைகளை மனதில் கொண்டு தன்னந் தனியனாக ரயிலின் முதல் வகுப்பு அறையில் பயணித்து சென்னை வந்தடைந்தார்.சென்னையில் பயணிகள் உதவியுடன் டாக்சி பிடித்து அவரது சின்ன அண்ணன் பணியாற்றும் அலுவலக வாசலில் நின்று கொண்டு செய்தி அனுப்பினார்.



                               Image result for chennai mount road


                   ஓடி வந்த அண்ணன் ஒற்றை ஆளாக காலில் கட்டுடன் மாசடைந்த மிலிட்டரி யூனிபாரமில் நிற்கும் கணேசனைக்கண்டு மிகவும் மன  வேதனைப்பட்டார்.ஹோட்டலில் சாப்பிட்டுகொன்டு தனி அறையில் தங்கியிருக்கும் அவரால் கணேசனுக்கு ஏதும் உதவ முடியாதென்று கடலூரிலிருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போக பஸ் டிக்கெட் வாங்கிக்கொடுத்தார்.
                கணேசன் கடலூர் வந்து சேர்ந்தார்.இதற்கிடையில் சன்னாநல்லூரிலிருக்கும் அப்பா,அம்மா கணேசன் போரில் ஒரு காலை இழந்து வந்திருக்கிறான் என்று செய்தி பரவியது.
                  செப்டம்பர் 17 ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது.கணேசனது படைப்பிரிவு என்ன ஆனது என்று ஏதும் செய்தி இல்லை.
                இந்நிலையில் மருத்துவ விடுமுறை முடிய கணேசன் சென்னை இராணுவ மருத்துவ மனையில் காலில் கட்டுடன் ரிப்போர்ட் செய்தார்.

                                                                         (  தொடருவோம்...........)















 

திங்கள், 8 ஜனவரி, 2018


                          உருவமற்ற குரல்..........5

                   அம்பாலாவில் தனித்து விடப்பட்ட கணேசன் லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மூன்று டோசர்களையும் ஒரு மண்மேட்டின் வழியாக கீழே இறக்கி டோசர்களையும் மோட்டார் கிரேடாரையும் அம்பாலா ரயில்வே ஸ்டேஷன் கொண்டுவந்தார்.போர் ஆரம்பமாகி விட்டதால் இராணுவ அமைப்புகள் அங்கும் இங்குமாகப் பறந்துகொண்டிருந்தார்கள்.வழியில் வந்த ஒரு அமைப்பிடமிருந்து வண்டிகளை ரயிலில் அனுப்புவதற்கான ப த்திரங்களை வாங்கி வண்டிகளை ரயிலில் புக் செய்துவிட்டு தனது வண்டியில் பதான்கோட் நோக்கி புறப்பட்டார்.வழியில் கிடைத்ததை வாங்கி சாப்பிட்டார்.
             அவர் பதான்கோட் வந்தது 05 செப்டம்பர் 1965.காலை சுமார் 10 மணி. வாசகர்கள் அன்றைய செய்தியை நினைவுகூறலாம்.போர் ஆரம்பித்த ஐந்தாவது நாள்.இந்த நேரத்தில் பாக்கிஸ்த்தானின் விமானப்படையின் செபர் ஜெட் விமானங்கள் பதான்கோட் விமானதளத்தை அங்குலம்  அங்குலமாகத் துளைத்துக்கொண்டிருந்தார்கள்.

 Image result for 1965 indo=pak war military train


                எங்கு பார்த்தாலும் கூக்குரல் ....எரிந்துகொண்டிருக்கும் இராணுவ வண்டிகள்... அடிபட்டுக்கிடக்கும் இராணுவத்தினர்.இந்த பயங்கர சூழ்நிலைக்குள் நுழைந்த கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு பதுங்குகுழி தேடி இங்கும் அங்குமாக ஓடுகிறார்.எங்கோ வெடித்துச்சிதறிய ஒரு இரும்புத்துண்டு கணேசனின் காலின் பாதப்பகுதில் தாக்க அவர் அங்கேயே சுருண்டு விழுகிறார்.
               விமானப்படை தாக்குதல் வெகுநேரம் நீடிக்க முடியாது.நமது Anti aircraft Guns அவர்களைத்தாக்க ஆரம்பித்துவிட்டது.ஓரிரு விமானங்கள் வீழ்த்தப்பட அவர்கள் ஓடிவிட்டர்கள்.வீழ்ந்துகிடந்த கணேசன் எழுந்திருக்க முயற்சித்தார்.வலது காலின் பாதத்தில் பயங்கர வலி.மிலிட்டரி பூட்ஸ்களை அவிழ்த்துப்பார்த்தார்.கட்டைவிரலுக்கு சற்று மேலிருந்து குபீரென்று இரத்தம் பீறிட்டது.வண்டியிலிருந்து பழைய துணியினால் கட்டுபோட்டுக்கொண்டு ஒரு காலில்  பூட்ஸ்ம் மற்றோரு காலில் துணிக்கட்டுமாக வண்டியிலேறி தனது படைப்பிரிவைத்தேடினார்.
                  போரின் தாக்கத்திற்கேற்ப அடிக்கடி உத்திரவுகள் மாறிக்கொண்டிருந்தன.அதிர்ஷ் ட்ட வசமாக அவரது படைப்பிரிவைக் கண்டுபிடித்தார் .அதற்குள் அவர்கள் ஜம்முவிற்கு அருகில் கத்துவா என்ற இடத்திற்குச்செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
                தலைவரிடம் காலில் அடிபட்டதைக்காட்டினார்.அவர் உடனடியாக பதான்கோட் இராணுவ மருத்துவமனைக்கு போகும்படி சொன்னார்.மருத்துவ மனை விமான தளத்திற்கு அடுத்த இடம்.அன்றைய தாக்குதலில் விமான தளம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.மருத்துவ மனையில் ஒரே கூட்டம்.
                 அங்கு சென்ற கணேசனுக்கு உடனே எக்ஸ்ரே எடுத்தார்கள் .காலில் கட்டைவிரலுக்கு மேலே எலும்பு முறிவு என்று சொல்லி பெரிய மாவு கட்டு போட்டு மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்கள்.காத்திருந்த டிரைவரிடம் செய்தியைச்சொல்லி போகச்சொல்லிவிட்டு மருத்துவமனை கட்டிலில் படுத்தார்.
            போட்டிருக்கும் பேண்ட்  சட்டை தவிர பாக்கெட்டில் ஐடென்டிட்டி கார்ட் மட்டும்தான் அவரிடம் இருந்தது.
           மருத்துவ மனைக்கு போரில் அடிபட்டவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.குண்டடி பட்டவர்கள்,கண்ணிவெடியில் சிக்கியவர்கள்,பீரங்கி தாக்குதலில் புதையுண்டு கண்பார்வை இழந்து,காது ஜவ்வு கிழிந்த நிலை என்று விதம் விதமான காயங்கள்.
                         மருத்துவமனைக்கு வராமலேயே மண்ணோடு மண்ணான வர்கள்
எத்தனை பேரோ யார் அறிவார்கள்.
                    பெரிய காயங்கள் ஏதுமின்றி காலில் கட்டுடன் கணேசன் அங்குமிங்கும் சென்று அடிபட்டவர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.இடை இடையே பீரங்கி வெடி சப்தமும் விமானங்கள் குண்டு வீசும் சப்தமும் வந்துகொண்டே இருந்தன.


                       Image result for 1965 indo=pak war military train


                09 செப்டம்பர் 65 அன்று இரவு பாகிஸ்தானின் பாராசூட் படைப்பிரிவினர் இந்திய எல்லைக்குள் இறக்கிவிடப்பட அவர்கள் போரிடுவதற்குப்பதில் தங்கள் பூர்வீக உறவுகள் தேடிப்போய்விட்டார்கள் .போரிட்ட பலரும் பிடிபட்டார்கள் .



              Image result for para dropping


                      கைகள் பின்னால் கட்டப்பட்டு கண்களும் கருப்புத்துணியால் கட்டப்பட்ட காயம் பட்ட பலூச் ரெஜிமெண்ட்டைச்சேர்ந்த பாகிஸ்தானியர்களை முதலுதவிக்காக மருத்துவமனை கொண்டுவந்தார்கள்.

                          இவைகளையெல்லம் பார்த்துக்கொண்டு பண்டைய போர்க்களங்களை நினைத்துக்கொண்டு கணேசன் நாட்களை செலவிட்டார்.09 செப்டம்பர் இரவு பாராசூட் படைப்பிரிவினரை இறக்கியதுடன் பதான்கோட் விமானத்தளம் கடும் தாக்குதலுக்குள்ளானது.
                  இதனால் மருத்துவமனையை கூடியவரை அவசர சிகிச்சைக்கு மட்டும் வைத்துக்கொண்டு ரயில் பயணத்தைக் தாங்கக்கூடியவர்களை  உடனடியாக டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற உத்திர விடப்பட்டது.
              10 செப்டம்பர் இரவு எந்தவிதமான வெளிச்சமும் இல்லாமல் ஒரு மிலிட்டரி காயம்பட்டவர்கள் ரயில் (Military Casuality Train)பதா ன்கோட்டிலிருந்து புறப்பட்டது.
                   Casuality Train ல் கணேசன்........கையில் காலணா காசு இல்லை.மாற்று உடை இல்லை.டூத் பேஸ்ட் பிரஷ் இல்லை.உற்றம் சுற்றம் உறவுகள் என்ன ஆனார்களோ.இராணுவம் என்ற அடையாளம் தவிர முகவரி களற்ற கணேசன் பயணித்துக்கொண்டிருந்தார் காலில் கட்டுடன்.........
                                     போர் நடந்துகொண்டிருக்கிறது. 
                                                                                (தொடரும்.........  )